Sunday 12 June 2011

ஜோர்தானில் தொடர்ச்சியான பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் இலங்கைப் பணிப்பெண்கள


ஜோர்தானிலுள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலையான கிளாசிக் பாஷனில் வேலைக்கெனச் சென்ற இலங்கைப் பெண்களில் பலரை அந்நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியமை தெரியவந்துள்ளது. உலகத் தொழிலாளர்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பு தொகுத்துள்ள ஒரு அறிக்கையிலேயே இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு பணியாற்றும் பல பெண்கள் தமக்கு நேர்ந்த இந்த பாலியல் ரீதியான மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த தொழிற்சாலைதான் முக்கிய ஆடையகங்களான வல்-மார்ட், ரார்கெற், மசிஸ், ஹேன்ஸ் ஆகியவற்றுக்கும் ஆடைகளை விநியோகம் செய்வது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தத் தொழிற்சாலையின் பொது முகாமையாளர் அனில் சந்தாவுக்கு எதிராக 300 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இவரைப் பணியிலிருந்து நீக்கவேண்டும் என்று கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் கிட்டத்தட்ட 2400 இலங்கை, இந்தியத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

தற்போது, இனிவரும் இளம் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பொருட்டு, ஒரு சில பெண்கள் முன்வந்து அங்கு நடக்கும் பாலியல் கொடுமைகளைத் தெரியப்படுத்தியுள்ளனர். ஆனால் அறிக்கையில் இப்பெண்களின் அடையாளங்களைத் தெரியப்படுத்தக்கூடாது என்பதால் அவர்களின் பெயர்கள் மாற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment